Monday, September 3, 2018

ஆசிரியர்கள் தினம்

நான் பள்ளியில் படித்த காலத்தை மூன்று வகைப்படுத்தலாம். ஜில்,ஜங்,ஜக் அல்லது மேல்நிலைக்கல்வி, இடைநிலைக்கல்வி மற்றும் ஆரம்பக்கல்வி.  எட்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வி இதில் என்னைப்பாதித்த ஆசிரியர்கள் சிலர், இந்த வரிசையில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் என்னைப்பாதித்தவர்களே உள்ளனர் மற்றபடி அதிக மதிப்பெண்னை எடுக்கவைத்தவர் எவரும் பெரிதாக இல்லை.  என்னால் மறக்க முடியாத ஆசிரியை எனக்கு இரண்டாம் வகுப்பு எடுத்த ஒருவர், அவர் பெயர் எனக்கு தெரியாது ஆனால் இன்றுவரை என் வாழ்வில் மறக்கத்துடிக்கும்,  வெறுக்கும் ஆசிரியை அவர். அப்படி என்ன  காரணம் இருக்கும் என நெனைக்கிறீங்களா?.  இடதுகை பழக்கம் உள்ள என்னை முட்டி முட்டியாக அடித்து வலது கையில் எழுத மாற்றியதே காரணம். ஒருவனை அவன் இயல்பிலிருந்து மாற்றி அதைத்தொடர கட்டாயப்படுத்தி இயல்பை மறக்கடிக்க வைப்பது என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய குற்றம். மிகவும் கண்டிப்பான பள்ளி எனவே  வீட்டிலும் சொல்லாமல், வீட்டில் இடதுகையிலும் பள்ளியில் வலது கையிலும் எழுதி சமாளித்தேன். ஒரு கட்டத்தில் பள்ளியில் எழுத்து வேலை அதிகமாகவும் வீட்டில் குறைவாகவும் மாறிட பின்னர் மெதுவாக வீட்டிலும் வலதுகையில் எழுத ஆரம்பித்துவிட்டேன். வீட்டில் உள்ளவர்கள் கவனிக்கையில் காலம் கடந்துவிட்டது, என் கையெழுத்தும் மோசமாகி , எழுதும்வேகமும் குறைந்திருந்தது. இந்த ஆசிரியையே என்னில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

அடுத்து ஏழாம் வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்த பாபு வாத்தியார். சின்ன வயசு, கண்டிப்பானவர் ஆனால் நன்றாக படிக்கும் மாணவர்களிடம் கண்டிப்பு குறைவு. நான் அவரின் செல்லமான மாணவனாகவே இருந்தேன் அந்த ஒருநாள்வரை, எதுக்கோ வகுப்பு நேரத்தில் வெளியே சுற்றிவிட்டு வகுப்புக்கு ஓடி வருகையில் ஏதோ ஒரு பாடலை மனதில் பாடி தலையை ஆட்டி ஆடிக்கொண்டே சென்றேன், வேறொறு வகுப்பில் இருந்து இதை கவனித்த அவர் அடுத்த வகுப்பில் என்னை கூப்பிட்டு என்ன செய்தாய் என கேட்டார், இதில் கண்டிப்பு இல்லை. அவர் விளையாட்டாக கேட்டார் ஆனால் நான் ஒன்றுமே செய்யவில்லை என சாதித்தேன். இந்த பொய்தான் அவரின் கோவத்தை கூட்டியது, அவர் அடித்தது மனதை காயப்படுத்தியது ஆனால் அதைவிட அதன்பின் நான் அவரின் செல்ல மாணவனாக இல்லை. எட்டாவது வரை மட்டுமே அந்த பள்ளியில் படித்தேன்,அதுவரையில் அவரின் பழைய பாசத்தை, நம்பிக்கையை  பெற முடியவில்லை. ஒரு பொய் அதை மறைக்க முயன்று ஆசிரியரின் நம்பிக்கையை தொலைத்தேன். இதில் நான் கற்றுக்கொண்ட பாடம் மிகப்பெரியது.  அந்த பாடமும் மிக காலம் கடந்தே கற்றுக்கொண்டேன்,நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களின் நட்பை இழப்பது கொடுமையானது. ஆசிரியர் தினத்தில் பிறந்த எனது தோழியின் நம்பிக்கையையும், நட்பையும் அதன் மூலம் மற்றும் சில நட்புகளையும்  எனது ஒரு தவறால் இழந்த
அந்த தருணத்தில் உணர்ந்தேன். மிகவும் தொய்ந்திருந்த காலகட்டம், நட்புகள் இல்லை, குழுவில் இருந்து விலக்குதல் அல்லது உதாசீனப்படுத்துதல் என அனுபவித்த காலம். ஒரு கட்டத்தில் வேலையை விட்டு சென்றுவிடலாம் என நினைக்க வைத்த காலம். ஆனால் பாபு வாத்தியார் மூலம் அனுபவித்ததை பல ஆண்டுகள் கழித்து பாடமாக கற்றுக்கொண்டேன்.

ஆறாம் வகுப்பில் இருந்தபோது தமிழ் வழி கல்வி கற்றதால்  மருத்துவக்கல்லூரியில் மிகவும் சிரமப்பட்ட என் அண்ணன் என்னை ஆங்கில வழி கல்வியில் சேர்த்துவிட சொன்னார். மிகவும் கோவப்பட்ட நான் அதுக்கு ஒத்துக்கவே இல்லை, வெட்டப்போற ஆட்ட கேட்டுகிட்டா வெட்றாங்க? நேரா நான் படித்த அதே பள்ளியின் மெட்ரிக்குலேசன் பிரிவில் கொண்டுபோய் விட்டனர். நல்ல வேலையாக அங்கு இருந்த தலைமை ஆசிரியர் என் விருப்பத்தை கேட்டார், எனக்கு விருப்பம் இல்லாததை உணர்ந்த அவர் என்னை சேர்த்துக்கொள்ளவில்லை. என்னால் மறக்க முடியாத ஆசிரியர். பத்து நிமிடமே அவருடன் நான் செலவிட்ட நேரம் ஆனால் என்னால் மறக்க முடியாத ஆசிரியர்.

நான் எட்டாம் வகுப்பு செல்லும்போது ஆண்டு விடுமுறையை அப்புச்சி வீட்டில் கழித்துவிட்டு பள்ளிக்கு செல்ல சீருடையை அணிய போனால் அங்கு மெட்ரிக்குலேசன் சீருடை இருந்தது. அப்பாவிடவும் அண்ணனிடமும் மேலும் வெறுப்பு வந்தது. கல்லூரி  செல்லும்போது மிகவும் சிரமப்படவேண்டும் என கருதி அண்ணன் ஏற்பாட்டில் எல்லாம் நடந்திருந்தது. வேறு வழி இல்லாமல் புது பள்ளி சென்ற நான் பின்பு எனது பள்ளி நாட்களில் மறக்க முடியாத நாட்களாக அடுத்து வந்த மூன்று  வருடங்களையும் சொல்கிறேன்.  ஆசிரியர்களை பயத்துடன் அணுகாமல் நட்புடனும் அணுகலாம்  என கற்றுக்கொடுத்த விஜயக்குமார் மற்றும் சிற்றரசன் ஆசிரியர்களை மறக்க முடியாது. 

ஆங்கில வழி கல்வியில் திண்டாடிய என்னை வகுப்பிலேயே தேர்வு பேப்பரில் எழுத்துப்பிழை இல்லாத வார்த்தைகள் மொத்தம் ஐந்து அதிலும் முதல் மதிப்பெண் எடுத்த பையனின் பேப்பரில் மொத்த எழுத்துப்பிழை மூன்று என ஒப்பீட்டு என்னை மிகவும் சோர்வடைய, தன்னம்பிக்கை குறைய வைத்த சுலோக்ஷனா டீச்சர். அதை அந்த வகுப்புக்கு வெளியே அடுத்த வகுப்புக்காக காத்திருந்த லக்ஷ்மி டீச்சர் கேட்டுவிட்டு அடுத்த வகுப்பில் உள்ளே வந்தவுடன் என்னை எழுப்பினார், அவரே வகுப்பாசிரியையும் கூட. ஏற்கனவே அவமானப்பட்டு சோர்ந்திருத்த என்னை மறுபடியும் போன வருடம் எந்த பள்ளி எனக்கேட்டார், நான் இதே பள்ளியில் தமிழ் மீடியம் என்றேன். இந்த காலாண்டுத்தேர்வில் எத்தனை பாடத்தில் தோல்வி என கேட்டார், நான் அனைத்திலும் பாஸ் டீச்சர் என்றேன். இன்னொரு பையனை எழுப்பி எத்தனை பாடத்தில் பாஸ் என் கேட்டார். அவன் மூன்றில் பெயில் எனக்கூற, எப்போதில் இருந்து மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்கிறாய் என கேட்டார்.  அவன் சேர்ந்ததில் இருந்தே எனக்கூறினான். உடனே ஒரு பாடத்திலாவது பெயில் ஆன அனைவரையும் எழுந்து நிக்கவைத்த பின்னர், இந்த பையனை பாருங்கள் இவன் இதுவரை தமிழ்மீடியத்தில் இருந்து படித்து இந்த வருடம்தான் மெட்ரிகுலேசன் ஆனால் எல்லா பாடத்திலும் பாஸ் ஆனால் நீங்க முதலில் இருந்து படித்தும் இப்படி என ஒப்பீட்டார். இவனைப்போல் கடின உழைப்போடு  படியுங்கள் என்றார். இந்த ஒப்பீடும் தவறு என்றாலும் அன்றைய என் சோர்ந்த மன நிலைக்கு  மிகவும் தேவையாக இருந்தது, மிகுந்த தன்னிம்பிக்கையை கொடுத்தது. அதிலிருந்து கல்லூரி செல்லும்வரை நான் எந்த பாடத்திலும் பெயில் ஆகவில்லை. இந்த காலகட்டத்தில் என்னால் மறக்க முடியாத ஆசிரியர்கள் இவர்கள். இவர்களுடன்  என் அண்ணணையும் சேர்த்துக்கொள்வேன், அவர் அன்று எடுத்த முடிவே என்னை இந்த நிலைமையில் கொண்டு வந்துள்ளது.

மேல்நிலைக்கல்வியில் தமிழ் ஐயா கோவிந்தசாமி, பிசிக்ஸ் வாத்தியார் பசுபதி மற்றும் மேக்ஸ் டியூசென் MM மறக்க முடியாதவர்கள்.

என்னை சீர்படுத்தியவர்கள் மற்றும் நேர்படுத்தியவர்கள் இவர்களே. இவர்களில் யாரும் என்னை முதல் மதிப்பெண் எடுக்க வைக்கவில்லை, அவ்வாறு எடுக்க வைத்தவர்கள் என் நினைவிலும் இல்லை. வாழ்வில் மறக்கமுடியா பாடங்களை கற்றுக்கொடுத்த  இந்த ஆசிரியர்களை என்னால்  என்றுமே மறக்கமுடியாது.

கல்லூரி ஆசிரியர்களில்  சிலர் மட்டுமே அவர்களில் மயில்சாமி, சி.பெரியசாமி, மொஹிதீன், HOD ராமதாஸ், முதலாம் வருடம்
சி, சி ப்ளஸ் ப்ளஸ் எடுக்க  கல்லூரி முடித்து வந்து மூன்று மாதங்களே  பணியாற்றிய வினோதினி, எங்கள் பிரிவில் பணியாற்றிய ஒரே பெண் விரிவுரையாளர் செல்வி என  அவர்களில் பலரை நேர்மறையாகவும் சிலரை எதிர்மறையாகவும் நினைவில் வைத்துள்ளேன்.  என்னுடைய அதிர்ஷ்டம் மேல்நிலைக்கல்வி மற்றும் கல்லூரி இரண்டும் அரசாங்க பள்ளி மற்றும் கல்லூரி. மிகவும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், எதை கற்பிக்க வேண்டும், எதை நாங்களே கற்க வேண்டும் என தெரிந்து அவ்வாறே செய்தனர். இது எங்களால் யார் துணையும் இன்றி எதையும் செய்யலாம் எனும் துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தது. மற்ற தனியார் கல்லூரி மாணவர்களை போல எதுக்கும் யாரையாவது எதிர்பார்த்து இல்லாமல் எங்களை நாங்களே பார்த்துக்கொள்ளும் நிலைக்கு கொண்டுவந்தனர். கல்லூரி விட்டு வெளியே வந்தபோது நான் அறிந்திருந்தது கல்லூரி எங்களை வெளிஉலகத்துக்கு தயார்படுத்தியிருந்தது.

இன்றுவரை ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ எனக்கு ஆசிரியராக பல பாடங்களை அதிலும் வாழ்க்கைப்பாடங்களை கற்றுக்கொடுத்துக்கொண்டே உள்ளனர். வாழ்க்கை உங்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டேதான் இருக்கும், அதில் இருந்து கற்றுக்கொள்வதும், பெற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் நம்மிடமே உள்ளது. இன்றைய தலைமுறையின் கற்றுக்கொள்ளும் ஆற்றல் பற்றி கொஞ்சம் பயமாகவே உள்ளது இருந்தும் அவர்களே இன்றைய சூப்பர் ஆசிரியர்கள்.

என்னை இந்த நிலைமைக்கு செதுக்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி. எழுத்துப்பிழை இருந்தாலும் மன்னிக்கவும்

Monday, March 26, 2018

மதச்சார்பின்மை

கல்லூரி காலத்துல ஒரு நண்பன் இருந்தான், அவன் எனக்குதான் நண்பன் அவனுக்கு நாங்க எப்படின்னு தெரியாது. தீண்டாமை என்றால் என்ன என எங்களுக்கு அவன் சொல்லிக்கொடுத்தான் எங்களுக்கு அது அப்போ புரியலை, இப்போ புரியுது.

அதே கல்லூரியில்தான் சாதி மறுப்பு, மத ஒற்றுமையையும் மற்ற நண்பர்கள் சொல்லிக்கொடுத்தனர்.

  மெஸ்ஸில் சாப்பிட நாங்கள் தட்டு வைத்துக்கொள்ள வேண்டும், வழக்கமான கல்லூரி மணவர்களைப்போல நாங்களும் சோம்பேறிகளாகவும், எதையும் கண்டுகொள்ளாமல் இளங்காளைகளாகவும் சுற்றிவருவோம். தட்டுகள் எல்லாம் வீணாக்கப்படும்போது மற்ற மாணவர்கள் தட்டுக்களே எங்களுக்கு உதவும். நாங்கள் அவற்றை உபயோகிப்பதை  மற்றவர்கள் ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை ஒரு சிலரைத்தவிற. அந்த ஒரு சிலரில் இந்த நண்பனும் வருவான், அவன் தட்டை நாங்கள் தொட்டால் கூட தீட்டு என்று நினைப்பான்,அவனை மீறி நாங்கள் தொட்டுவிட்டால்  அதன்பின் அந்த தட்டு எங்களுக்கு சொந்தமாகிவிடும். வெகுநாள் எங்களுக்கு இந்த நிகழ்வு எளிதான வகையில் தட்டை சொந்தங்கொண்டாடுவதாக இருந்தாலும். ஒருநாள் நாங்கள்  இது ஒரு நவீன தீண்டாமை என உணர்ந்தோம். ஊருக்கு சென்று வருகையில் வீட்டில் இருந்து கொண்டுவரும் திண்பண்டங்கள் அனைத்தும் பகிர்ந்து உண்ணப்படும். இந்த நண்பன் கூட எங்களுக்கென்று தனியாக ஒரு பொட்டலம் கொண்டு வருவான் அதை அப்படியே  எங்களுக்கு கொடுத்துவிடுவான் அப்போது அது எங்களுக்கு சந்தோசமாக இருக்கும் ஆனால் நாங்க கொண்டுவரும் தீனியை தொடாமல் இருந்தது இப்போது தீண்டாமை என புரிகிறது.

விடுமுறையில் குற்றாலம் செல்வது எங்களுக்கு வாடிக்கை,அப்போது செல்லும்போதெல்லாம் தங்குவது செங்கோட்டை மற்றும் புளியங்குடி அருகில் இருக்கும் நண்பர்கள் வீட்டில் தான். எத்தனைபேர் வந்தாலும் முகம் சுழிக்காமல் எங்களுக்கு சமைத்துப்போட்டு தங்களில் ஒருவனாக கருதியவர்கள் அவர்கள் பெற்றோர்.  அவர்களை என்றுமே மறக்கமுடியாமல் இருக்கும் காரணம் அவர்களின் விருந்தோம்பல், அத்தகைய மக்களையே இன்று அவர்களின் மத நம்பிக்கை காரணமாக வேற்றுமையாக நினைக்கச்சொல்கிறது இந்தியாவை ஆளும் கட்சி இன்று.

இவர்கள் ஆட்சிக்கு வரும்வரை எனக்கு ஊழல் மட்டுமே எரிச்சலாக இருந்தது. என்னைப்பொருத்தவரை எந்த சாதியோ மதமோ என் நண்பர்களை வேறுபடுத்தவில்லை. நவீன தீண்டாமைகள்கூட காலப்போக்கில் காணாமல் போயிருந்தன. கடந்த நான்கு வருடங்களில் எத்தனை மாற்றம்?
சாதி மூலமாகவும், மதங்களைக்கொண்டும் வேற்றுமையை நினைக்க வைக்க எவ்வளவு மெனக்கெடல்? இன்று என் நண்பர்களில் சிலர் தன் பெயருக்குப்பின்னால் சாதியை சொருகிக்கொண்டதில் இருந்து, சிலர் நான் இவர்களை எதிர்ப்பதாலேயே என்னை விட்டு விலகியதில் இருந்து இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

திராவிட கட்சிகள் ஐம்பது ஆண்டுகளில் கொண்டுவந்த சமூக நீதியை நான்கே  வருடங்களில் இப்படி உடைக்குமென்றால் உங்கள் கட்சியோ ஆட்சியோ எனக்கு வேண்டாம்.  நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை எனது நண்பர்கள் மட்டுமே ஆனால் இன்று மூளைச்சலவை செய்யப்பட்டு  அவர்களில் சிலர் சாதியால் மதத்தால் பிரித்தாளும் தன்மை பா.ஜ.கவால் மட்டுமே வந்துள்ளது. இது வேரறுக்கப்படவேண்டும் இல்லையென்றால் தமிழகம் அடைந்துள்ள மற்றும் அடையப்போகும் சமூக நீதி குலைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் பின்தள்ளப்படுவோம்.

நன்றாக யோசியுங்கள், நாம் நான்கு ஆண்டுகளுக்கு முன் இத்தகைய மனநிலையில் இருந்தோமா? செல்லாக்காசான பா.ஜ.க எதுக்கு தினமும் தொலைக்காட்சியில் வந்து தேவையில்லாத பிரச்சனையை விவாதிக்க வேண்டும்? ஊடகங்கள்,அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் மற்றும் பலருடன் இவர்கள் செய்வதும் ஒரு இனப்படுகொலைதான். யோசித்தால் ஒன்றல்ல பல என புரியும்.

வருத்தங்களுடன்...