Saturday, August 27, 2011

நம்ம இந்திய ரயில்வேயில் சில திருடர்கள்

வழக்கமாக நான் ரயிலில் பயணம் செய்வதை தவிர்ப்பேன் ஏனென்றால் எனக்கு சின்ன வயதில் இருந்தே ரயில் பயணம் பிடிப்பதில்லை ஆனால் அலுவலக பயணங்களில் ரயிலைத்தவிர்த்து வேறு வழி இல்லாததால் ரயில் பயணம் தவிர்க்க முடியாத இன்பமாகிற்று.


நம்ம ஊர் ரயில் பயணங்களில் பெரிதாக ஒன்றும் இருப்பதில்லை, வழக்கமாக ரயிலில் வட இந்திய நகரங்களுக்கும், மேற்கு வங்காள இல்லை இல்லை பச்சிம் பங்கா ( என்னங்கடா இது ) மாநிலத்துக்கும் போவதென்றால் சிறிது கிலி ஏறப்படுத்தும். ஒன்னு நமக்கு பஞ்சு மிட்டாய் விக்க தெரியாது (அதாங்க ஏக் காவுமே ஏக் கிசான் ரகு தாத்தா, ரக ரக..... இந்தி ) அப்புறம் அவங்க என்னமோ அவங்க சொந்த வீட்டு ரயில் மாதிரி நினைப்பானுங்க. அதும் நடு இரவில் எங்கயாவது ரயிலில் நீங்க ஏறி செல்ல வேண்டும் என்றால் போதும் உங்க பயணம் இனிதே நடக்கும். கண்டிப்பா எவனோ இல்லை எந்த பெண்மணியோ உங்களுடைய இருக்கையில் கால் நீட்டி படுத்து செத்த பொணம் போல தூங்குவாங்க, நீங்க எழுப்பினா எழுதிரிக்க மாட்டாங்க, எழுந்தாலும் கொஞ்ச நேரம் பஞ்சுமிட்டாய் வித்துட்டு படுத்துடுவாங்க, நமக்கு ஒன்னும் புரியாது. சேட்டையா செட்டம்மா எழுந்திரிங் என பெனாத்திட்டு அப்புறம் கருப்பு கோட் போட்டவர் வரவரைக்கும் திரு திருன்னு நின்னுகிட்டோ இல்லை பக்கத்து இடத்தில உக்கார்ந்தோ இருக்க வேண்டியதான். உங்க ராசி எபவாவது ஒரு தடவ இங்கிலிபீசு பேசற கருப்பு கோட் வரும் வந்தா நல்லது இலாட்டி எப்படியோ ஒரு வழியா உங்களுக்கு இருக்கை வாங்கி அமரும்போது நீங்க இறங்க வேண்டிய இடம் பக்கத்தில் வந்துவிடும்.



நம்ம பச்சிம் பங்கா மாநிலத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றால் முதலில் நான் தேடுவது பகல் ரயில்களை மட்டுமே. அந்த மாநிலத்தில் இரவில் ரயில் ஓடாது, வெகு சொற்பமான ரயில்களே ஓடும் அதும் மிக தாமதமாக ஓடும். நீங்க எங்காது இறங்கி வேறு ரயிலை பிடிக்க நினைத்து டிக்கெட் பதிவு செய்தால் தயவு செய்து பகல் ரயில்களில் செய்யுங்கள் மேலும் அங்கு எல்லா ரயில்களும் குறைந்தது இரண்டு மணிநேரம் தாமதமாக மட்டுமே வரும். இதையெல்லாம் மனதில் வைத்து இரண்டு அல்லது அதற்கு மேற்கொண்ட வகைகளில் டிக்கெட் பதிவு செய்யுங்கள். ஆனால் ரயில் ஏறும் முன் முந்தகைய ரயில் டிக்கெட்டை கான்செல் செய்வது உத்தமம் இல்லாவிட்டால் உங்கள் பணம் அம்பேல்.



நான் கொல்கத்தா சென்று அங்கிருந்து துர்காப்பூர் செல்ல வேண்டி இருந்தது, ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் ரயில் ஆதலால் நேரத்துக்கு கிளம்பியது. செல்லும்போது ஒன்னும் பிரச்னை இல்லை திரும்பி வரும்போது காலையில் ஏழு மணி ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை பதிவு செய்து இருந்தேன், மேலும் ஒன்பது மணி ராஜதானியில் குளிர்சாதன வகுப்பு இருக்கையும் பதிவு செய்து இருந்தேன். வழக்கம் போல ஏழு மணி வண்டிக்கு ஏழரைக்கு ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன், எதிர்பார்த்த மாதிரியே ரயில் தாமதம், ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் மேலும் ஒரு அரைமணி நேர தாமதம் அறிவிக்கப்பட்டு ஒரு வழியாக பதினோரு மணிக்கு ரயில் வந்தது. அதிர்ஷ்டவசமாக ராஜதானியும் குறைந்த தாமதத்தில் பதினொன்றே கால் மணிக்கு வரும் என்று அறிவித்தார்கள். நான் என் அதிர்ஷ்டத்தை நம்பி ராஜதானிக்கு காத்திருந்தால் எனக்கு அன்று மிகப்பெரிய அதிர்ஷ்டம் சரியாக சொன்ன நேரத்தில் ராஜதானி வந்தது. ஒரு வழியாக அதில் ஏறி கொல்கத்தா வந்தடைந்து அங்கிருந்து டாக்ஸி பிடித்து ஏர்போர்ட் சென்று சரியான நேரத்துக்கு விமானத்தை பிடித்தேன். இதுலே எங்க ரயில்வே திருடியது என்கிறீர்களா?



சென்னை வந்து பயணம் செய்யாத ஏழு மணி டிக்கெட்டை ITR பதிவு பண்ணி மீதி காசை வாங்கி விடலாம் என பதிவு செய்தேன். அப்போதே அவர்கள் சொல்லிய டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் பயமுறுத்தியது. ஆமாம் அவர்களுக்கு குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் ஆகுமாம் பணத்தை திருப்பித்தர ஆனால் அதிகபட்ச நாட்களை கூறவில்லை. சரி வரும்போது வரட்டும் என பதிவு செய்து விட்டு இன்னொரு டிக்கெட்டுக்கும் இதேபோல பதிவு செய்தேன். நான் பதிவு செய்தது நவம்பர் 2010 இல். இந்த மாதம் முதல் வாரத்தில் அவர்களிடம் இருந்து ஒரு ஈமெயில், நான் பொய்யான காரணத்தை கூறி மீதிபணத்தை கேட்பதாகவும், நான் அந்த ரயிலில் பயணம் செய்ததற்கு சான்று உள்ளதாகவும் கூறியிருந்தனர். நானும் மறுபடியும் நான் பயணம் செய்த டிக்கெட்டை ஸ்கேன் செய்து (நல்ல வேலை அலுவலகத்தில் சமர்பிக்கும் முன் ஸ்கேன் செய்தது நல்லதா போச்சு ) இப்படி இப்படி நான் அடுத்த கால் மணி நேரத்துல வந்த ரயிலில் பயணம் செய்தேன் அப்படி இருக்கும் போது நீங்க சொல்வது நியாயமாகாது என பதில் அனுப்பினேன். மேலும் அவர்களின் தொலைபேசி எண்ணுக்கு மூன்று வாரமாக தொடர்பு கொள்கிறேன் ஆனால் எவரும் எடுப்பது இல்லை.



அடுத்த செய்தி, மேலும் ஒரு மெயில் ஆமாம் இன்னொரு டிக்கெட்டுக்கு அவர்களின் பதில் "நீங்கள் கூறிய காரணம் ஏற்ப்புடையது அல்ல, ரயில் தாமதமாக வரவில்லை அதனால் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது". அதிலேயே நான் பயணம் செய்யாத காரணத்தால் பணத்தை திருப்பி கேட்டிருக்கிறேன் என எழுதியுள்ளது அதற்கு பதில் ரயில் தாமதமாக வரவில்லையாம் அதனால் கொடுக்க முடியாதாம். இதற்கும் பதில் எழுதி அனுப்பியுள்ளேன் ஆனால் அவர்களிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. ஏன்யா இப்படி திருடுறது சரி அதக்கூட சரியான நேரத்துல சொல்லிருக்கலாம்ல, இப்படி இப்படி நான் திருடிட்டேன் அதனால் நீ கேட்காதனு சொல்லி இருந்தா விற்றுகலாம்.

இதே மாதிரி நம்ம தென்னிந்திய ரயில்வே கிட்டயும் ஒரு டிக்கெட்ட பதிவு செய்தேன் ஒரே வாரத்துல பணத்த கொடுத்தும் இல்லாம பணம் அனுப்பப்பட்டது என மெயில் வேற வந்தது. அப்போ நம்ம மம்தா ஊர்காரங்க எல்லோரும் திருடன்கள் என நினைக்க தோன்றுகிறது. இதே நேரத்துல ராஜஸ்தானில் மட்டுமே அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் எல்லா பொருட்களையும் விக்கறாங்க அத கேட்ட நாம கேட்கறது அவனக்கு புரிஞ்சாலும் புரியாத பாசைல திட்டறான இல்லையான்னு தெரியாம சொல்றாங்க.


இந்த ரயில்வேயின் அட்டகசதுக்காக எங்க உ புகார் அளிப்பது என தெரியவில்லை, சரியாக ஒரு மாதம் காத்திருந்து பிறகு நுகர்வோர் கோர்டில் வழக்கு பதிவு செய்யலாம் என நினைத்து உள்ளேன். தகுந்த வக்கீலை பிடிக்க வேண்டும். இதை சும்மா விடக்கூடாது.எவன் காசை எவன் திங்கறது?

Thursday, August 11, 2011

வருசத்துக்கு நாலு தான்


சமீபகாலமாக பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியத்தை நிறுத்தப்போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இவர்கள் மானியம் கொடுக்கிறோம் என்பதே ஒரு கேலிக்கூத்து, அதை விடுங்க, ஏற்கனவே இருக்க விலைவாசில பெட்ரோல் விலைய தாறுமாறா ஏத்தி அப்பர் மிடில் கிளாஸ் மக்களைக்கூட மிடில் கிளாஸ் மக்களாக மாற்றி வைத்துள்ளனர். டீசல் விலைய கூட்டி விலைவாசிய ஏத்தி வச்சு இருக்காங்க, சரி இதெல்லாம் சொன்னா பலர் ஆதரவாகவும் சிலர் எதிப்பாகவும் வருவாங்க. சமையல் எரிவாயுவ ஒரு பத்து ஆண்டுக்கு முன்னாடிதான் அரசு அதிகமா முன்னிறுத்தியது, மக்கள் சமையல் ஏரிவாயுவ பயன்படுத்தணும் என கேட்டுக்கொண்டது, பின்னர் அவர்களே மக்களுக்கு அதிகம் சென்றடையும்படி பார்த்துக்கொண்டனர் எல்லாம் மிகச்சரி ஆனால் இப்போது மானியத்தை குறைக்கணும் விலையைக்கூட்டனும் என்றால் எப்படி?


இப்போது ஒரு யோசனையை கொண்டு வந்துள்ளனர், அதாவது நாலு சிலிண்டர்க்கு மேல் மானிய விலை கிடையாதாம், எந்த கணக்குல நாலு சிலிண்டர் என சொல்றாங்க? ஒரு குடும்பத்துல இருவர் மட்டும் இருந்தால் வருடதுக்கு நாலு சிலிண்டர் போதும், அதுவே குழந்தைகள் இருந்தால் அதிகம் தேவைப்படும், எப்படியும் கொஞ்சம் சிக்கனமாக இருந்தால் முடிந்த வரை சமாளித்து விடலாம், இதெல்லாம் தனிக்குடித்தனம் பண்ணும் ஒருவர்க்குத்தான் பொருந்தும். ஆனால் இதே நிலையில் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் கூட்டுக்குடும்பத்தில் எப்படி? அப்பா அம்மா மனைவி குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக தேவை அதிகரிக்கும் அப்போது இந்த நாலு சிலிண்டர் கணக்கு எப்படி ஒத்துவரும்?


ஒரு குடும்பத்துக்கு ஒரு குடும்ப அட்டை மட்டுமே வாங்க முடியும், குடும்ப அட்டை இருந்தால் மட்டுமே சமையல் சிலிண்டர் வாங்க முடியும் இப்போது ஒருவர் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால் அவரது செலவை அரசே அதிகரிக்க முடிவு செய்துள்ளது போல உள்ளது. அரசு இதுபோல மக்களின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்ட எரிபொருட்களை கண்ணா பின்னாவென விலை ஏற்றாமல் அதை வேறு வழிகளில் சமாளிக்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.

ஒரு சிறிய உதாரணம், பெட்ரோல் விலையை ஏற்றாமல் அதற்குப்பதில் மதுபானத்தின் விலையை அதிகமாக்கலாம் கூடவே புகையிலைப் பொருட்களின் விலையை அதிகமாக்கலாம். இதனால் மதுபான உபயோகம் குறைந்தாலும் லாபம் தான்.


பொதுப்போக்குவரத்தை இன்னும் வசத்திப்படுத்தி மக்களுக்கு அளிக்கலாம், நல்ல பேருந்தும் ரயிலும் எளிதில் டிக்கெட் கிடைத்து எங்கு சென்றாலும் தடையின்றி கிடைத்தால் ஏன் மக்கள் உபயோகப்படுத்த தயங்குவார்கள்?

நாளுக்குநாள் வெளிவரும் ஊழல் செய்திகளைப்பார்க்கும்போது இன்னும் இரு வருடத்தில் தமிழக தேர்தலில் வந்த முடிவுகள் இந்தியா முழுவதும் வர வாய்ப்புள்ளது போல தோன்றுகிறது. ஆப்பு வைக்க நான் ரெடி

Wednesday, August 10, 2011

மங்காத்தா

பொதுவாக நான் எந்த நடிகருக்கும் ரசிகன் இல்லை, படம் நல்லா இருந்தா எல்லா நடிகர்களின் படத்தையும் பார்ப்பேன். பிரபலமானவர்கள் எந்த துறையில் பிரபலம் ஆனார்களோ அந்த துறையை விட அவர்களின் பொது வாழ்க்கைமுறையால் அவர்களை எனக்கு பிடிக்கும். உதாரணம் சச்சின், ஏ ஆர் ரகுமான் மற்றும் அஜித்.

கில்லி படத்துக்கு பிறகு விஜய் சில வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார் அந்த படங்களைப்பிடித்தாலும் அவர் அஜித்தை சில படங்களில் ஓட்டியது எனக்கு பிடிக்காது, குறிப்பாக சச்சின் படத்தில் தொப்பை வைத்து ஆடியிருப்பார். அஜித்கூட உனக்கென்ன என்று ஒரு பாடலை பாடி இருந்தாலும் அந்த பாடல் எனக்கு பிடித்த பாடல் ஆகியது. ஆனால் சாஜகான் படம் வரையிலும் விஜய்யின் காஸ்டியும் எனக்கு பிடிக்கும், மிக நேர்த்தியாக அவர் உடை இருக்கும்.


அஜித் படங்கள் என்னை பெரிதாக கவரவில்லை என்றாலும் அஜித்தை எனக்கு புடிக்கும், அவரின் வாழ்க்கைமுறை அவரது பேச்சு எல்லாமே என்னை கவர்ந்தவை, ஹீராவுடன் காதலாக இருக்கட்டும், பைக் பிரியமாக இருக்கட்டும், அவரது பழைய பேட்டிகளாக இருக்கட்டும் அவரது உதவும் குணங்களாக இருக்கட்டும் பின்னர் அவரது காதல் வாழ்க்கையாக இருக்கட்டும், கார் ரேஸ், பில்லா படத்தின்போது வந்த அவர் பேட்டி, பொது நிகழ்சிகளில் கலந்துகொள்ளாமை, கருணாநிதி முன் அவர் பேசிய பேச்சு, எல்லாமே எனக்கு பிடித்தவை.


நானே அவரைப்பார்த்து அவரை முன்னோடியாக வைத்து சில விசயங்களை செய்திருக்கிறேன். சின்ன வயதில் இருந்து உங்களுக்கு எதுவோ ஒன்னு ரொம்ப பிடிக்கும் ஆனால் பணமில்லாததால் அதை செய்ய முடியவில்லை, பின்னாளில் பணம் வந்தபோது அந்த ரொம்ப பிடித்த விசயங்களை நாம் செய்யாமல் விடுவோம் ஏனென்றால் அதில் ஒரு பயனும் இல்லை என நினைத்து. அஜித் அப்படி இல்லை,சினிமா நடிப்பது அவர் தொழில் அதில் பணம் சம்பாதித்து அவர்க்கு பிடித்த செயல்களை செய்யும்போது அவரின் மீது இருந்த அபிப்ராயம் பெருகியது. பணம் சம்பாதித்து அவர் கார் ரேசில் செல்வதாக இருக்கட்டும், ரிமோட் விமானம் இயக்குவதாக இருக்கட்டும் அவர் அவரேதான்.

ஆனால் எனக்கு அவர் படங்கள் அவ்வளவாக பிடித்ததில்லை, தீனா பிடித்து இருந்தது பின்னர் அட்டகாசம் பிடித்து இருந்தது. பில்லா எனக்கு பிடிக்கவில்லை அதில் ஸ்டைல் இருந்த அளவுக்கு அவர்க்கு நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. அந்தப்படத்தில் அவரிடம் ஒரு செயற்கைத்தனம் தெரியும், பின்னர் வந்த ஏகனில் நீண்ட நாளைக்குபிறகு பழைய பிரெஷ் ஆன அஜித் தெரித்தார், இதே பிரெஷ் ஆனா நிலையில் தீனா மாதிரி ஒரு படம் கொடுத்தால் நல்லா இருக்கும் என தோன்றியது.

கவுதம் மேனன் கூட படம் செய்கிறார் என்று கேள்விப்பட்டபோது படம் ஓடும் அனா தீனா மாதிரி இருக்காது என நினைத்தேன், பிறகு மங்காத்தா என சொல்லிய பின்னர் கொஞ்சம் பயந்தேன், வெங்கட்பிரபு எந்த அளவுக்கு செட் அவார் என யோசித்து, நாள் நெருங்க நெருங்க வந்த செய்திகள், படங்கள் எல்லாம் படத்தின் மேல் எதிர்பார்ப்பை அதிகம் ஏற்றின. அதிலும் டீசர் ட்ரைலர் மற்றும் ஒரு பாடல் இரண்டும் அட்டகாசம். ஆனாலும் ஒரு பயம் இருந்தவந்தது, நேற்று இரவு திடிரென்று ஒரு நண்பன் தனது பேஸ்புக் தளத்தில் படத்தின் ட்ரைலரை சேர்த்து இருந்தார், எதோ பொய்யான ட்ரைலர் என நினைத்து பார்த்தேன் ஆனால் உண்மையான ட்ரைலர் தான்.


முழுவதும் பார்த்தேன் அட்டகாசம், ஆமாம் நீண்ட நாட்களுக்குப்பிறகு பழைய அஜித்தை பார்க்க முடிந்தது



"500 குரோர்ஸ்.... அம்மோவ்" "இட்ஸ் மை fa.....ங் கேம்" "கிவ் மீ மோர்" என படத்தின் ட்ரைலர் தூள். நிறைய தடவை பார்த்திருப்பேன் அந்த ட்ரைலரை, ஒரு ஸ்டைலான குறும்பான அஜித், நீண்ட நாட்களுக்கு பின்னர் பழைய அஜித். படமும் தீனா மாதிரி இருந்தா ரொம்ப நல்லா இருக்கும். இன்னமும் தீனா படத்தில் கத்தி, அருவ, செயின் என எல்லா ஆயுதத்தையும் லைலாவிடம் குடுக்கும் காட்சி நினைவில் நிற்கிறது. ட்ரைலர் ஒன்றே படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகமாக்கிவிட்டது. வெங்கட் பிரபு சொதப்பாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த பதிவை எழுத வேண்டுமா என யோசித்தேன் பின்னர் எழுதினால் என்ன தப்பு என முடிவெடுத்து முதன் முதலாக ஒரு நடிகனை ரசித்ததற்காக பதிவெழுதுகிறேன்.

Thursday, August 4, 2011

ஜாதகம்


நம்ம மக்கள் வாழ்க்கைல ஒரு நாளாது இத நெனச்சு கோவப்படாம இருந்தது இல்ல. சமீப காலமாக எனக்கு ஒரு சந்தேகம், ஆமா சந்தேகமெல்லாம் நமக்கு எப்ப வரும்? நாம ஏதாது ஒன்னுன்னால பாதிக்கப்பட்டா மட்டும் தான் வரும்.


அது ஏன்னு தெர்ல நம்ம ஊர் ஆளுங்க மட்டும் தொட்டதுக்கெல்லாம் ஏன் ஜாதகம் பாக்கறாங்கன்னு தெரியல. பிறக்கும் போதில் இருந்து இறக்கும்போது வரை நம்ம ஊர் மக்கள் வாழ்க்கைல அழுகையுடன் ஜாதகமும் கூடவே வருகிறது. ஆனா அதனால எந்த ஒரு நன்மையாவது நடந்து இருக்கா என்று தான் தெரியவில்லை.




குழந்தை பிறந்து பெயர் வைப்பதில் இருந்து ஆரம்பித்து விடுகிறது, இந்த எழுத்தில் தான் வைக்க வேண்டும் என ஆரம்பித்து இத்தனை எழுத்து தான் இருக்கணும், இத்தனை நம்பர் தான் இருக்கணும் என்று எல்லாம் கண்டிசன் போட்டு ஒரு வழிய நல்ல வாயில நுழையற வாழைப்பழம் என்னும் பெயரையே vaazhaaippaahaam என்று வைத்துக்கூப்பிடும் அளவுக்கு ஆகிப்போச்சு. கொழந்தைக்கு பேர் வைக்கணுமா? மொட்டை போடணுமா?? பள்ளிக்கூடம் சேர்க்கனுமா? அட நீங்க வேற பள்ளிக்கூடம் சேர்க்க பையனுக்கு ஜாதகம் பார்த்தா பரவால்ல பள்ளிக்கூடத்துக்கே ஜாதகம் பார்க்கறவங்க எல்லாம் இருக்காங்க. இப்படி எல்லாம் பார்த்து கொழந்தைய படிக்க வச்சா, அது படிப்புல கொஞ்சம் கம்மியாகிட்டா போதும் அவனுக்கு ஜாதகத்துல கிரகம் சரி இல்ல ரெண்டு வருசத்துக்கு அப்படித்தான்னு சொல்லி எல்லா தப்பையும் ஜாதகத்து மேல போட்டு சமாதானம் ஆகிடுவாங்க. நான் ஒன்னு கேட்க்கிறேன், இது வரைஜாதகம் பார்த்து எந்த ஜாதகக்காரனாது நாம எடுக்க முடிவ ஆமாம் இதான் சரின்னு சொல்லி இருக்கானா??. நீங்க ஒரு முடிவெடுத்து வீடு கட்டலாம்னு போனா கிரகம் சரியா இல்ல ரெண்டு வருசத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது அப்படிம்பான்.


சின்ன முடிவு பெரிய முடிவு ரெண்டையும் நம்ம மேல நம்பிக்க வச்சு எடுக்கறத விட்டுட்டு எவனோ ஒருத்தன் ஜாதகம் பாக்கறான்னு சொல்லி அவன்கிட்ட போய் முடிவெடுக்க அலைஞ்சு தன்னம்பிக்கையே இல்லாத தமிழனா நம்மை நாமே மாத்திக்கிட்டோம்.




கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தா பொண்ண புடிச்சுருக்கானு பையன்கிட்ட கேட்க்காம ஜாதகம் பாக்கரவன்கிட்ட கேட்கறது எந்த விதத்துல நியாயம்னு எனக்கு தெரியல. இதுவரைக்கும் நம்ம வாழ்க்கைல ஜாதகம் பார்த்து என்ன வளமா இருந்து இருக்கு, ஜாதகம் பார்க்காம இருந்து என்னதான் நடக்கல?? எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் ஆனா இத யாரும் புரிஞ்சுக்கற நிலைமைல இல்ல.




இளைய தலைமுறைகூட ஒரு வயசுக்கப்புறம் ஜாதகத்துமேல ரொம்ப நம்பிக்க வச்சு அலையுதுங்க. சமீபத்துல எனது நண்பர் ஒருவர் கூட ஒரு பெரிய பிரச்சனைல இருந்து மீண்டு வர போராடிக்கிட்டு இருக்கார், ஆனா அவர் அதுக்கு பதிலா இன்னொரு பிரச்சனையான ஜாதகத்துல மூழ்கிவிட்டார். ஜாதகத்த ரொம்ப நம்பி தான் அதுல நிறைய தெரிஞ்சுகிட்டதாகவும் மேலும் அவரை விட யாருக்கும் பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்றும் சொல்லி எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார். உனக்கு தைரியம்னா என்னனு கூட தெரியலை என்று எனக்கு தலை சுத்தற அளவுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார். நான் ஒன்னு கேட்கறேன், தைரியம்னா என்னன்னு எல்லோருக்கும் அவரவர் அகராதில ஒரு அர்த்தம் இருக்கும், நீங்க ஏன் உங்களோட அகராதில இருக்க அர்த்தத்தையே எல்லோரும் படிக்கணும் என்று நெனைக்கறீங்க??



மொத்ததுல ஜாதகத்தை நம்பினோர் எலோரும் தங்களோட தைரியத்தை, தெளிவான சிந்தனையை கைவிட்டுவிடுகின்றனர். அப்படி ஜாதகம் எல்லோருக்கும் இருக்கு என்றால் நம்ம ஊரைத்தாண்டி ஏன் வெளிநாட்டில் எல்லாம் என்ன இருக்கா? இல்லை ஜாதகத்தைபார்த்து சொல்லும் எல்லோரும் ஒரே மாதிரியாத்தான் சொல்றாங்களா? படிச்சவன் படிக்காதவன் என்று விதிவிலக்கு இல்லாம ஏன் போய் இதில் விழறாங்கன்னு எனக்கு தெரியல.




நான்கூட ஒரு காலத்துல ஜாதகத்தை நம்பிக்கிட்டு இருந்தவன்தான் ஆனா இப்ப எல்லாம் அதுல நம்பிக்க சுத்தமா இல்லாம போய்டுச்சு. கஷ்டம் வரும்போதுதான் மறுபடியும் ஜாதகத்தை எடுக்கணும் என்று தோணும் போல ஆனா இனி முடிவெடுத்துவிட்டேன், கஷ்டம் வந்தா ஜாதகத்தை நம்பாம என்னை நம்புவது என்று... என் ஜாதகம் எழுதியவர் இனிமேல் ஜாதகம் பார்ப்பது இல்லை என்ற முடிவில் உள்ளாராம்.






பின்குறிப்பு: நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுவதால் பிழை இருந்தாலும் மன்னிக்கவும்