Wednesday, December 22, 2010

பேருந்துப்பயணம்

கடந்த சில வாரங்களாக அடிக்கடி ஊருக்கு சென்று வந்ததால் பேருந்துப்பயணம் சாத்தியமாகியது. உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் முதலில் ஒரு வாரம் தனியார் ஆம்னி பேருந்தில் திருச்சி சென்று அங்கிருந்து கரூருக்கு மறுபடியும் பேருந்து மாறி சென்றேன்.  பத்து மணிக்கு கத்திப்பாராவில் அந்த நேரத்துக்கு வந்த பேருந்தில் எதில் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்ததோ அதில் ஏறினேன். அவர்களே தாம்பரத்தில் கொஞ்ச நேரம், பெருங்களத்தூரில்  வெகுநேரம் என நிறுத்தி பதினொன்றுக்கு கிளப்பினர். பெருங்களத்தூரில் கிளம்பும்போதே கோயம்பேட்டில் ஏறிய ஒருவர் சண்டை போட ஆரம்பித்தார், கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் வர அவர்கள் எடுத்தொக்கொண்ட நேரம் மூன்று மணிநேரம்  மேலும் அவர் கொடுத்தது ரூபாய் 300  ஆனால் நான் கொடுத்தது ரூபாய் 250  எனக்கப்புறம் தாம்பரத்தில் ஏறியவர்கள் இன்னும் இருபது குறைத்து கொடுத்தனர்.  கோயம்பேட்டில் ஏறினவன் கடுப்பாக மாட்டானா?  திருச்சி ஒரு வழியாக கலை ஐந்து மணிக்கு கொண்டு சேர்த்தனர், பேருந்தும் நம்ம அரசுப்பேருந்து போலத்தான் இருந்தது கொஞ்சம் அத விட பரவாயில்லை. திருச்சி வரை சாலை நன்றாக இருப்பதால் எந்த பேருந்தா இருந்தாலும் செல்லலாம் அசவுகரியமா இருக்காது.

திருச்சியில் இருந்து கரூருக்கு சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கிய உடனே பேருந்து கிடைத்தது, இரண்டு பேர் அமரும் இருக்கையில் முன் படிக்கட்டுக்கு அடுத்து இருக்கும் இருக்கையில் அமர்ந்தேன். நான் ஒரு முழுக்கை சட்டையும் அதன் மேல் ஒரு ஜெர்கினும் அணிந்திருந்ததால் குளிர் அடிக்கவில்லை தலைக்கு குல்லா வேறு. அங்கு அமர்ந்தால் தான் யாரும் அருகில் அமர மாட்டார்கள் ஏனென்றால் குளிர் காற்று பேருந்து வேகத்தில் மோசமாக அடிக்கும். கரூர் பேருந்து நிலையத்தில் அடையும் முன்னே வயிறு கலக்கியது. திருச்சி கரூர் சாலை (சாலை என்பதே கிடையாது) குளித்தலைக்கு பிறகு ஓரளவு இருக்கிறது. இவளவு மோசமான சாலை இன்னும் உள்ளதா என யோசிக்க வைத்தது. கரூர் பேருந்து நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு செல்லும் நகர பேருந்தில் ஏறினேன். தனியார் சிற்றுந்து தான், உறுமி உறுமி கிளப்பவே பத்து நிமிடம் ஆகியது அடுத்த இரண்டாவது நிமிடத்தில் எனது வீட்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்தேன். டிக்கெட் வாங்கும்போது நன் இரண்டு  ரூபாய் கொடுக்க "மூணு ரூபா கொடு" என்றார் நடத்துனர். நான் இரண்டு ரூபாய் தான என கேட்க "அதெல்லாம் ஏத்தியாச்சு பிரைவேட் பஸ்ல மூணு ரூபா தான்" என சொல்ல அதற்குள் நான் இறங்கும் இடம் வந்ததால் கொடுத்துவிட்டு வந்தேன். 

அடுத்த முறை திரும்பி சென்னை வர அதுபோலவே பேருந்துப்பயணம். கரூர் திருச்சி அரசுப்பேருந்து கோயம்புத்தூரில் இருந்து வரும் பேருந்து அதனால் விரைவில் செல்லலாம் என நினைத்து நான் செல்ல ஓட்டுனர் உருட்டு உருட்டு என உருட்டினார். மூன்று மணி நேரமாக சென்று திருச்சியை அடைந்து இறங்கி சென்னை பேருந்தை தேடினேன். அந்த நேரம் பார்த்து தனியார் பேருந்து எல்லாம் முன்னூற்று ஐம்பது ரூபாய் கேட்க அரசுப்பேருந்து ஒன்று தான் நமக்கு வழி என பேருந்தை தேடினேன். அந்த நேரம் பார்த்து அரசு ஏசி வோல்வோ பேருந்து (நம்ம சென்னை வோல்வோ பேருந்து தான் ) வந்தது டிக்கெட்  பயண நேரம் ஐந்தரை  மணி நேரம் என எழுதியதை நம்பி நானும் அட்ஜஸ்ட் செய்து  அமர்ந்து சென்று விடலாம் என நினைத்து கிளம்ப. படு பாவி ஆறரை மணி நேரம் உருட்டினார்கள். இதுக்கு சாதாரண டீலக்ஸ் பேருந்தில் ஏறி இருக்கலாம் அவர்களே இதே நேரத்தில் தான் வருகிறார்கள்.  ரொம்ப கஷ்டப்பட்டு வந்து சேர்ந்து . கத்திப்பாராவில் இருந்து வேளச்சேரிக்கு திருச்சி செல்ல கொடுத்த தொகையை விட அதிகமா ஆட்டோ கேட்கிறார்கள். ஒரு வழியாக வழியே சென்ற ஆட்டோவில் நூறு ரூபாய் கொடுத்து வந்து சேர்ந்தேன்.

அடுத்த முறை நேரடியாக கரூர் பேருந்தில் ஏறி விடலாம் என நினைத்து ஏறி அமர்ந்தால் பாதி தூரத்தில் நிறுத்தி எதோ லோட் லோட் என தட்டிக்கொண்டு இருந்தனர், ஒரு இரண்டு மணி நேர தட்டல்க்கு பிறகு ஒரு வழியாக கிளம்பி காலை ஏட்டு மணிக்கு கரூர் வந்து சேர்ந்தேன், என்ன கிளம்பினது இரவு எட்டு மணிக்கு. காரில் வந்தா ஐந்தரை மணி நேரமும், திருச்சி வழியாக தனியார் பேருந்தில் வந்தால் ஏழு மணிநேரமும் ஆகும் ஊருக்கு பனிரெண்டு மணிநேரப்பயணம்.  மறுபடியும் சிற்றுந்து அவர்களும் மூன்று ரூபாய் கேட்க ஏரிச்சலானது.  மறுபடியும் சென்னை வர அரசுப்பேருந்து இவர்கள் பரவாயில்லை பத்தரை மணிநேரம் சென்றனர். (வழியில் சின்ன லோட் லோட் தட்டல் மட்டுமே) ஆனால் அரசுப்பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றி உயிரை எடுக்கிறார்கள். துறையூரில் இருந்து எவ்வளவு பயணிகளை ஏற்ற முடியுமோ அவ்வளவு பயணிகளை இரண்டு சீட்டுக்கு நடுவில் உள்ள இடத்தில அமர வைத்து கல்லா கட்டுகிறார்கள். கைய கால நகத்த முடியல கொஞ்சம் மேல பட்டாலும் உடனேகீழ உட்கார்ந்து இருக்கவன் ஏன் மேல இடிக்கற என நம்மையே ஏசுகிறான். இந்த கொடுமையை எல்லாம்  சகித்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தா ஆட்டோகாரங்க கொள்ளை ஐயோ.

கரூருக்கு கடந்த மூணு தடவை அரசுப்பேருந்தில் சென்றேன் மூன்று தடவையும் பாதி வழியில் வண்டி நின்றுவிட "லோட் லோட் தட்டல்கள்" இரண்டு மணிநேரம் சகஜம். தனியார் நகர பேருந்தில் குறைந்த பட்ச கட்டணம் மூன்று ரூபாய். கேட்டால் வேனும்ன இறங்கிக்கோ என பதில்.  தனியார் ஆம்னி பேருந்தில் கொள்ளை. இதெல்லாம் வேணாம் என காரில் போலாம் என்றால் பெட்ரோல் விலை மூன்று ரூபாய் விலை ஏற்றம்.
பேருந்து நிலைமை ரொம்ப கவலைக்கிடம், கஷ்டப்பட்டு ஏறி உட்கார்ந்தா வெள்ளை சட்டை மட்டும் போட்டு போயிருந்தா அவ்வளவுதான் இறங்கும்போது உங்க வீட்ல காறி துப்புவாங்க. மூட்டபூச்சி எல்லாம் உங்க கூட ஏறி விழுந்து கடிச்சு விளையாடும். அதுவே அரசு எசி  பஸ் என்றால் ஒரு கம்பளி கொடுப்பாங்க  (அதக்கூட கேட்டுத்தான் வாங்கணும்) அத மட்டும் முகத்த மூடுற மாதிரி போர்த்திடாதீங்க அவ்வளவுதான் அப்புறம் நீங்க குளிர்ல நடுங்கினாலும் பரவல என்று நினைப்பீர்கள். துவைப்பது என்றால் என்ன என கேட்கும் அளவுக்கு சுத்தம்.




பந்த பாசம் எல்லாத்தையும் குறைத்து எதற்கும் கவலைப்படதவனாக தனியாக வாழ விரும்பும் என்னை இந்த அரசாங்கமும் உடன் சேர்ந்து பந்தம் பாசம் இல்லா மனிதனாக மாற்ற எல்லா முயற்சிகளை செய்கிறது. இனிஊருக்கு போவதற்கு நன்கு யோசித்து அவசியம் என்றால் மட்டுமே செல்கிறேன். போனில் பேசுவதையும் ஏர் டெல் முயற்சியால் குறைத்துவிட்டேன்.
நம்ம மாதிரி இன்னொருவரும் அனுபவப்பட்டு இருக்கிறார் இதைக்கூட படிங்க.... ஆகா நான் மட்டும் இல்லை என நினைக்கும்போது ஒரு அல்ப சந்தோசம்

இந்த குறைகளை எல்லாம் எங்கு புகார் கொடுக்க வேண்டும் என்ற விவரமும் தெரியவில்லை. என்ன பண்ண வெங்காயம் விலை ஏறிப்போச்சு என நினைத்த நம்ம பிரதமரே இப்போ கடிதம் எழுதும் வேலைய செய்ய ஆரம்பித்துவிட்டார், கடிதம் எழுதும்பழக்கம் நம்ம ஊரில் இருந்து டெல்லி வரை சென்றுவிட்டது. நாமும் முகவரி இல்லாம ஒரு கடிதத்தில் எல்லா குறைகளையும் எழுதி தபால் பெட்டில போட்டுடலாம். நம்ம மாதிரியே அதுவும் அட்ரெஸ் இல்லாம சுத்திகிட்டு இருக்கும்.  தேர்தலுக்காக வெய்டிங் தலைவரே. நீங்க குடுத்த டிவிலதான் நாங்க உங்கள பத்தின ஊழல் செய்திகள பாத்துகிட்டு இருக்கோம். அடுத்த முறை எல் சி டி  டிவி யா அப்கிரேட் பண்ணிக்கொடுத்தா இன்னும் நல்லா இருக்கும் 

2 comments:

தராசு said...

எப்பப் பார்த்தாலும் புலம்பறதே பொழப்பாப் போச்சு.

ஆனா, இந்த மூட்டைப் பூச்சிக்கு பயந்து தான் பஸ்ஸுக்கு பக்கத்துலயே போறதில்லைப்பா....

Anonymous said...

என்ன நண்பா, அடிக்கடி ஊருக்கு போறீனா, பொண்ணு பாத்துகிட்டு இருக்காங்களா?

-எல்லாம் உனக்கு தெரிஞ்சவந்தான் :)