Monday, January 23, 2012

அரசு போக்குவரத்துக் கழகம்

சென்னையில் இருந்து கரூருக்கு நான் சென்ற அனுபவம், கடந்த மாதம் திடிரென்று ஊருக்கு செல்லலாம் என முடிவு செய்து வழக்கம் போல ஒரு நாள் முன்னாடி டிக்கெட் பார்த்தால் எந்த பேருந்திலும் டிக்கெட் இல்லை. சென்னையில் இருந்து கரூருக்கு கேபிஎன், விவேகம், ராயல் இப்போ புதுசா பாலாஜி என 4 நான் ஏசி பேருந்துகளும் பர்வீண் மற்றும் திருச்சி கரூர் வழியாக கோவை செல்லும் எஸ்ஆர் என்ற ஏசி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் சார்பில் இரண்டு அல்ட்ரா டிலக்ஸ் பேருந்துகளும் அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் இரண்டு டிலக்ஸ் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் கரூரில் அரசு விரைவுப்போக்குவரத்து கழகத்தின் டிப்போ இருந்தபோது ஒரு நாளைக்கு பகலில் 5 பேருந்தும் இரவில் 5 பேருந்தும் சென்னைக்கு இயக்கப்பட்டன  ஆனால் இன்று இரண்டு பேருந்து மட்டுமே.


இதில் எஸ் ஆர் பேருந்து சமீபத்தில் ஆரம்பித்தது, இவர்கள் வழித்தடமும் கட்டணமும் மிக அருமை. எக்மோரில் கிளம்பி திருவான்ம்யூர் வந்து வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் வழியாக தாம்பரம் வந்து அங்கிருந்து திருச்சி கரூர் வழியாக கோவை செல்கின்றனர். இதனால் வேளச்சேரி, திருவான்ம்யூர் மேடவாக்கம் வழித்தடத்தில் உள்ள பலர் பயன் பெறுகின்றனர், பேருந்தில் பாதிபேர் வேளச்சேரி மற்றும் மேடவாக்கம் பகுதியில் ஏறுகின்றனர். வெள்ளி இரவு தவிர மற்ற நாள்களில் சென்னை டு கரூர் டிக்கெட் ரூபாய் நானூறு. ஏசி பேருந்து. அரசு பேருந்திலேயே முநூற்றி அறுபத்தி ஐந்து ரூபாய் டிக்கெட் அதுக்கு கோயம்பேடு போக அடித்து பிடித்து போகணும், நேரமாகிட்டா ஆட்டோக்கு தண்டம் அழுகனும் அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. வெள்ளிகிழமை ஐநூறு. கேபிஎன் எப்பவுமே சரியான நேரத்துக்கு செல்ல மாட்டார்கள், சமீப காலமாக சர்வீஸ் மோசம், விவேகமும் அதே போலத்தான், ராயல் சர்வீஸ் பரவாயில்லை, பாலாஜி புதுசு இனிதான் எப்படி என்று தெரிய வேண்டும். அரசுப்பேருந்து கும்பகோணம் டிலக்ஸ் வண்டி நேரம் சரியாக போய்விடுவர் ஆனால் வண்டி மோசம், வசதியாக இருக்காது, மேலும் அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டும் பயணிகள் காலுக்கு கீழே கூட உட்கார வைத்து எல்லோருக்கும் அசவுகரியத்தை கொடுப்பார். அரசு விரைவுபோக்குவரத்து கழகம் அதிக ஆட்களை ஏற்ற மாட்டார்கள் , மித வேகம் சொகுசாகவும் இருக்கும் சுத்தம் கொஞ்சம் கம்மியாக இருக்கும் (கேபிஎன் மற்றும் விவேகம் பேருந்தும் இது போலத்தான்)நேரம் கூட ஓரளவுக்கு சரியாக செல்வர் என்ன எப்போதாவது வண்டி பாதியில்  நின்றுவிட்டால் தாமதம் ஆகும்.


இதை விடுங்க, அன்று எந்த தனியார் பேருந்திலும் டிக்கெட் இல்லை, அரசுப்பேருந்தில் விரைவுப்போக்குவரத்து கழக பேருந்திலும் இல்லை அடுத்து டிலக்ஸ் பேருந்தில் இருந்தது,தற்போது ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்பதால் நண்பனை அழைத்து பதிவு செய்ய சொன்னேன். என்னுடைய பான் கார்டு கொடுத்து பதிவு செய்தாயிற்று. வெள்ளிக்கிழமை 8 . 45 மணிக்கு பேருந்து, வேளச்சேரியில் இருந்து D 70 பேருந்துக்கு காத்திருந்தால் ஏகப்பட்ட கூட்டம்.  பெரிய பையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என ஆட்டோ ஒன்றை பிடித்தேன், சிறிது நேரம் பேரம் பேசி ஏறினேன், ஏறும்போது ஆட்டோ ஓட்டுனர் மேல் சரியாக கோவம் அதிகம் கேட்கிறார் என்று, ஒரு மணிநேர பயணத்தில் அவரிடம் பேச்சு கொடுத்து வந்ததில் அவரின் நியாயமும் புரிந்தது. காதல் திருமணம் புரிந்து கொண்டு வந்து ஆட்டோ ஓட்டி சம்பாதிப்பதாகவும் முன்பு போல் இப்போது வருமானம் இல்லையம். இப்போது குட்டியானை (டாட்டா ஏஸ்) ஷேர் ஆட்டோ வந்துவிட்டதால் நிறைய பேர் அதில் சென்று விடுகிறார்கள், மேலும் இந்த மாதிரி நீண்ட தூர சவாரி எதுவும் வருவதில்லை,  உள்ளிருந்து பேருந்து நிலையம் வரும் சவாரிகள் அதிகமாக வருகின்றன அதில் ஒரு சவாரிக்கு நாற்பது ரூபாய் சம்பாதிக்க முடியும் ஒரு நாளில் நானூறு முதல் ஐநூறு ரூபாய் வரும் அதில் ஆட்டோ ஓனருக்கு 150 மேலும் சாப்பாட்டு செலவு 50 போக வீட்டுக்கு 300 கொடுப்பேன். பையன் பள்ளி செலவு போக கஷ்ட ஜீவனம் என்று சொன்னார். மேலும் தன்னைப்போல ஒரு சாரரும் ஆட்டோ ஓட்டுனராக இருந்து நேர்மையாக சம்பாதிப்பதாகவும் ஆனால் ஒரு சாரார் அநியாயத்துக்கு  கேட்டு மொத்த ஓட்டுனருக்கும் கெட்ட பெயர் வாங்கித்தருகின்றனர் என கூறினார். எப்படியோ சரியாக 8 .35 க்கு கோயம்பேட்டில் விட்டு விட்டார், பேருந்தை கண்டுபிடித்து செல்வதற்கு 5 நிமிடம், அப்போது அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு திருச்சி பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் உரக்க என்னை கூப்பிடவே நான் திரும்பல ஏனென்றால் நான் என் பேருந்தை கண்டுபிடித்துவிட்டேன் அதானல் கவனிக்கவில்லை. அவர்கள் மறுபடியும் என்னவோ ஏலக்கடையில் ஏலம் விடுவது போல நீல சட்ட வா என ஒருமையில் அழைக்க கடுப்புடன் சென்றேன், எந்த பேருந்து என கேட்டுக்கொண்டே கையில் இருந்த பிரிண்ட் அவுட்டை பிடுங்கினார்கள் பின்னர் அவர்கள் எதோ உதவி செய்வதை போல அந்த பேருந்துதான் போ என நன் ஏற்கனவே கண்டுபிடித்து சென்ற பேருந்தை காட்டினார்கள். நான் கடுப்போடு அய்யா நான் ஏற்கனவே கண்டுபிடித்து போனேன் என்னை ஏலம் விடுவது போல கூப்பிட்டு எதுக்கு இது, உங்ககிட்ட உதவி கேட்ட மட்டும் செய்யுங்க என்று சொல்லி எனது பேருந்துக்கு வந்தேன்.

பேருந்தில் ஏறும்போதே நடத்துனர் எந்த சீட் என்றார், எனது இருக்கை எண் 10 , சொன்ன உடன் ஆன்லைனா எப்போ வரதுன்னு தெரியாதா? இவனுக பாட்டுக்கு ஆன்லைன் டிக்கெட் ஆப்சன் புதுசா போட்டுட்டாங்க அவன் அவன் செய்துவிட்டு வந்து நம்ம தாலிய அறுக்கானுங்க என்று கூறி போய் உட்கார் என்று (மறுபடியும் ஒருமை).பேருந்து கிளம்பும் நேரத்துக்கு இரண்டு நிமிடமிருக்கும்போது நடத்துனரின் புலம்பல் அதிகரித்தது, ஓட்டுனர் கிளம்பலாமா என கேட்க இன்னும் இரண்டு ********ங்க இன்னும் வரல இருங்க போலாம் என கூறினார், பின்னர் ஒரு ஐந்து நிமிடம் பொருத்து இருந்து வண்டியை கிளப்பினர். அதுவரை படியில் நின்றுகொண்டு இருந்தவரிடம் எனக்கு பக்கத்துக்கு இருக்கையில் அமர சொன்னார் நடத்துனர். அவரும் என் அருகில் அமர்ந்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தார், பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வர முயற்சி செய்து கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் செல்போனில் பேசினார், நல்ல வேலை சீட் கிடைச்சுருச்சு என மகிழ்ச்சியாய் பேச, அருகில் இருந்த பெண் கூட செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார் ஆனால் அவர் தலையாட்டலும் அவரின் பார்வையும் இவரைப்பார்த்து இருந்தது, நமக்கு எதுக்கு இந்த புலன் விசாரணை என்று தூங்க முயற்சி செய்தேன்.
பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது, ஒருவர் ஓடி வந்து வண்டியை நிறுத்தினார். அவர் இதில் டிக்கெட் பதிவு செய்து இருப்பதாகவும் சிறிது நேரம் ஆகிவிட்டதாகவும் கூறினார், நடத்துனர் நாங்கள் சிறிது நேரம் வெயிட் செய்து பார்த்தோம் நீங்க உங்க இஷ்டத்துக்கு வந்தா நாங்க என்ன பண்ண, வேற ஒருவருக்கு சீட் கொடுத்தாச்சு இப்ப என்ன பண்ணுவது? என்னால் ஒன்னும் செய்ய முடியாது என்றவர் வண்டியை கிளம்ப சொன்னார். பின்னர் அந்த பயணி நான் ஆர்ஐ பையன் என சொல்ல வண்டி சடன் ஸ்டாப். உடனே அவரை ஏற்றிக்கொண்டு கிளம்பியது, என் அருகில் இருந்தவரை வேறு ஒரு இருக்கைக்கு மாற்றிக்கொண்டு அதில் அந்த பையனை அமர வைத்தார். பின்னர் அவரிடம் அப்பாக்கு டிரான்ஸ்பார் வந்தாச்சா, என்ன பண்றீங்க என கதை பேசிவிட்டு சிறிதுநேரத்தில் என்னிடம் டிக்கெட் கேட்டார். அப்போது தான் ஆரம்பித்தது என்னுடைய நல்ல நேரம்.

டிக்கெட் பிரிண்ட் அவுட் கொடுத்தேன் உடனே என்னுடைய பான் கார்டு கேட்டார், நானும் எடுத்து கொடுத்தேன், பின்னர் பான் கார்டை என்னிடம் கொடுத்துவிட்டு உடனே ஒரு நிமிடம் உங்க பான் கார்டு கொடுங்க என்றார், நானும் திருப்பிக்கொடுக்கவே அவர் இதில் உங்க பேர் மாற்றி இருக்கு என்றார், நான் பார்த்தபோது டிக்கெட் பூக்செய்த நண்பன் எனது பேரில் ஒரு எழுத்தை மறந்து விட்டு இருந்தான். நான் டிக்கெட்டிலும் பான் கார்டிலும் ஒரே பான் நம்பர் தான் இருக்கு மேலும் பெயர் எழுதும்போது தவறாக ஒரு எழுத்தை மறந்து இருப்பார்கள் என்றேன். உடனே அதெல்லாம் எனக்கு தெரியாது டிக்கெட்டில் இருக்கும் பேர்க்கு மட்டுமே நீங்க சான்று கட்டனும் இரண்டும் வேராக இருந்தால் இறங்கிகோங்க, நான் பெருங்களத்தூரில் இறக்கிவிட்டுவிடுகிறேன் என கூறினார். நான் முடியாது எந்த விதத்தில் இறக்கி விடுவீர்கள் டிக்கெட் பதிவு செய்தபோது ஒரு எழுத்து விடுபட்டாலும் எனது பெயர் மாறவில்லையே ( தனராஜ் என்பதற்கு பதில் தன்ராஜ் ) என கூறினேன், உடனே ஒருமையில் இறங்கினார். இந்த பேச்சல்லாம் என்கிட்டே வச்சுக்காத, நான் ரூல்ஸ் படித்தான் செய்யறேன் வேணும் என்றால் போய் கம்ப்ளைன் செய்துக்கோ என்றார். நான் கம்ப்ளைன் செய்யத்தான் போகிறேன் ஆனா அதுக்கு உங்க பெயரும் பணி எண்ணையும் கொடுங்க என்றேன், அவர் அதுக்கு பஸ் ரூட் சொல்லு அவங்களுக்கு தெரியும் என்றார். அவர் பெயர் பாட்ஜ் அணிந்து இருக்கவில்லை. என்னால் இறங்க முடியாது அப்படி நான் இறங்க வேண்டும் என்றால் நீங்கள் என்னிடம் எழுதி கொடுங்கள் இந்த தவறால் பயணி பயணிக்க முடியாது என்று நான் மேற்கொண்டு பார்த்துகொள்கிறேன் என கூறினேன். டிக்கெட்டை தப்பா பதிவு செய்துவிட்டு என்கிட்ட நியாயம் பேசறியா? என மறுபடியும் ஆரம்பிக்க, அருகில் இருந்த அந்த பையன் " அண்ணா பாவம் அண்ணா விட்ருங்க" என சிபாரிசு செய்தான், எனக்கு வந்த கோபத்தில் அவனிடம் நீங்க எனகொன்றும் சிபாரிசு செய்ய தேவை இல்லை உங்க வேலையை பார்த்துக்கொண்டு இருந்தால் போதும் என கூறவே நடத்துனருக்கு மறுபடியும் கோபம் வந்தது. சக ஊழியரின் பையனை அதுவும் அவர்க்கு மேல் உள்ள ஊழியரின் பையனை இப்படி சொன்னால்? இதற்காகவே உன்னை பேருந்தில் இருந்து இறக்கி விடலாம் தெரியுமா என கூறினார். நான் உங்களால் முடிந்தால் செய்யுங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறிவிட்டு அவரிடம் என் பான் கார்டை வாங்கிக்கொண்டு அமர்ந்தேன்.

பெருங்களத்தூரில் இன்னொரு நபர் ஏறவில்லை அதனால் முதலில் ஏற்றிய நபரிடம் அந்த இருக்கையில் அமர சொல்லிவிட்டு, நல்ல வேலை இவன் வரல இல்லன்ன ஒரு பஞ்சாயத்து ஆகிருக்கும் போல என ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு என்னை பார்த்து முறைத்துவிட்டு அமர்ந்தார். சரி இத்தோடு முடிந்தது என நினைத்து பயணத்தை தொடர்ந்தேன்.
காலையில் கரூர் சென்று இறங்கும்போது இதே போல வேற யாரிடமாது செய்து ஒரு நாள் வாங்க போறான் பாரு என்று என் காதுபட கூறினார். நான் கடைசி படியில் நின்று இறங்காமல் அவரை பார்த்து முறைத்தேன். என்ன முறைக்கற அதான் ஊரு வந்துட்டல்ல இறங்கி போ என்றார். நீங்க தேவை இல்லாம பேசறீங்க,நேற்று இரவு நடந்தது அதோட முடிந்தது மறுபடியும் ஆரம்பிக்கணும்னா நான் ரெடி என்றேன், உடனே அவர் என்ன உங்க ஊர் என்று துள்ளுரியா இந்த வேலை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே என சொல்ல, நான் எந்த ஊரா இருந்தாலும் பாத்துக்குவேன் அதும் இது என் ஊரு இங்கயே என்கிட்ட பேசினா நல்லா இருக்காது என்றேன், நம்ம ஊரில் நம்மகிட்ட இப்படி பேசுகிறாரே என கோவத்தில்.
இருவரும் கீழே இறங்கி வார்த்தைகள் தடிக்க ஓட்டுனர் விடுங்க தம்பி வீட்டுக்கு போங்க என்று என்னை சமாதானப்படுத்தினார். நான் எனது சகோதரரை அழைத்து ஒரு சிறிய பிரச்சனை பேருந்தில் என கூற அவர் உடனே வருகிறேன் என்று கூறினார். அதற்குள் என்ன ஆள் கூப்பிடுரியா எனக்கும் தெரியும், அரசு ஊழியரிடம் வம்பு செய்தால் உனக்கு தான் பிரச்சன ஒழுங்கா ஓடிடு என்று கூறவே. அது அரசு ஊழியருக்கு நீங்க தான் உங்க வேலைய ஒழுங்கா செய்யலியே அப்புறம் எப்படி ஊழியர் அவீங்க என சொல்லி சிரித்தேன். அதற்குள் சத்தம் கேட்டு அரசு விரைவுப்போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்தவர் வந்தார். ( பேருந்து நின்றது அந்த அலுவலகத்துக்கு அருகில் ) மேலும் அங்கு புத்தக கடை வைத்திருப்பவரும் வந்தார். வந்த இருவரும் என்னதம்பி என்ன பிரச்சனை என்று என்னை பார்த்து கேட்க, இவர்தான் நேற்றில் இருந்து பிரச்சனை செய்கிறார் என்று நடந்தவற்றை கூறினேன்.
இடையில் அவரும் ஸ்டாப் கிட்ட வம்பு பண்றான் என்னனு கேளு என்று சொல்ல, அருகில் இருந்த ஒருவர் இவர் எல்லாம் மரியாதையா தான் பேசினார் நடத்துனர்தான் கொஞ்சம் ஓவரா பேசினார் என்றார். அரசு விரைவுப்போக்குவரத்து அலுவலர் ஏன்பா நம்ம வண்டில வர வேண்டியதான என்று கூறிவிட்டு, நடத்துனரிடம் நீங்க ஏன் எல்லோரிடமும் சண்டை போடுகிறீர்கள் அதுவும் நம்ம ஸ்டாப் பையனிடம் கூடவா? என்று கேட்க அவர் கொஞ்சம் திகைத்தார்.


நான் அவங்க ஜி எம் கிட்ட புகார் கொடுக்கபோறேன் என்று கூறினேன். ரொம்ப ஓவரா பேசிட்டார் உன்னால முடிஞ்சத பண்ணு சொல்லிட்டார் அதனால் நான் என்னால என்ன பண்ண முடியும் என காட்றேன் என்று கூறவே. என் அப்பாவின் நண்பர் விடுப்பா என்று கூறி, நடத்துனரிடம் மறுபடியும் சமாதனம் பேசினார். சின்ன விசயத்த பெருசாக்காத என்று கூறி சமாதனம் செய்ய, அதற்குள் என் அண்ணனிடம் இருந்து போன் வந்தது கிளம்பிவிட்டதாகவும் ஏதும் பிரச்னை என்றால் அரசு விரைவுப்போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருக்க சொன்னார். பின்னர் அப்பாவின் நண்பர் ஏன் தம்பி பிரச்னையை பெருசாக்கறீங்க என்று என்னிடம் கூறி விட்டு நடத்துனரிடம் நீ செய்த வேலைக்கு இப்போ உனக்கு தான் பிரச்னை, பையன் பெரிய அளவுக்கு கொண்டு போறேன், ஜிஎம்க்கு மேல போகும் ஒழுங்கா விட்டுவிடு என சொல்லி அவர்க்கு புரிய வைத்தார். உடனே அவர் ஆளே மாறிப்போய் இருந்தார், என்ன தம்பி இத நேற்றே சொல்லி இருந்தீங்க என்றால் இந்த பேச்சே வந்து இருக்காதே என்று கூறினார். நீங்க வெயிட் செய்தது எல்லாம் சரி ஆனால் பேச்சில் மரியாதையை இல்லாவிட்டால் எவனும் அரசுப்பேருந்தில் ஏற மாட்டான் இனிமேலாவது மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறி சென்றேன்.

அரசுப்பேருந்தின் நன்மைகள் என்னவென்றால் கிளம்பும் முன் சிறிது நேரம் காத்திருப்பார்கள், பேருந்து ஏதும் பிரச்னை என்றாலும் சிரமம் பார்க்காமல் வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள். அதி வேகம் செல்ல மாட்டார்கள், அதனால் விபத்தில் உயிரிழப்புகள் தனியார் பேருந்தை விட கம்மி என்பது என் கருத்து.ஆனால் இவர்கள் போல பேருந்துக்கு தாங்கள்தான் ஓனர் என்ற நினைத்துக்கொண்டு இருந்தால் எவ்வளவு கட்டணம் ஏறினாலும் பேருந்து லாபத்தில் நடக்காது.






3 comments:

கோவை நேரம் said...

அட...பரவாயில்லையே...இப்படிதான் இருக்கணும்..

Marc said...

அட போங்கப்பா கொல்லுறாங்க!!

தராசு said...

very good,